வியாழன், 10 ஜூலை, 2014

பதினெண் கீழ்கணக்கு..!


ஊடல் முற்றி ஓர் நாள் என்னவள்
காடு தாண்டி அவளின் கூடலூருக்கு சென்றுவிட்டாள்..!
அன்பின் ஆரணங்கவளை அழைக்க
ஆரண்யம் தாண்டி சென்றேன்..
நடைவழி பயணத்தில்
நாலடியார் அங்கு வந்தார்..!
நாட்டு நடப்பை பேசிக் கொண்டே
நான்மணிக் கடிகைப் பாதையில்
இன்னா நாற்பதை சொல்லிக் கொண்டே
அவளின் இனியவை நாற்பதை எண்ணிக் கொண்டே
களவழி நாற்பதைக் கடந்த போது
காற்வழி நாற்பது கை நீட்டி அழைத்த்து..!
ஐந்திணை ஐம்பதும்
திணைமொழி ஐம்பதும்
ஐந்திணை எழுபதோடு ஆர்ப்பரித்து நின்றது
திணைமலை நாற்பதும் திசை காட்டி நின்றது..!
அங்கே திருக்குறள் தென்றல் வீசும்
திரிகடுகச்சாரலில்-என்
ஆசாரக் கோவையவள்
அழகெழிலாய் நின்றாள்..!
என் பாரி அவளுக்கு
பழமொழி நானூறும் சொல்லி
சிறுபஞ்சமூலம்.. கரம் பிடித்து
முதுமொழிக்காஞ்சிக்கு
அழைத்து வந்தேன்...
அவளில்லா என் வாழ்வு
வலக்கை இழந்த நிலை
வருத்தமாய் உணர்த்திட்டேன்..
ஏலாதிப் பட்டினத்தில்
அவளுடன் ஏகாந்தம் தினம் துய்த்து
கைந்நிலை உணர்த்திட்டேன்..
பதினெண்கீழ்கணக்கு நூலணைத்தும்
பகிர்ந்து கொண்டே..
பால் நிலவு எழிலவள்
ஊடல் களைந்தாள்..
கூடல் மொழி பொழிந்தாள்..!

திங்கள், 7 ஜூலை, 2014

பத்துபாட்டு..!


முத்தமிழின் ரெத்தினமே
வைரமணி சித்திரமே
மூவேந்தர் வளர்த்த
செந்தமிழின் சிறு நகையே..

நீ
திருமுருகாற்றுப்படை நடத்தி
பெருநாற்றுப் படை எடுத்து
சிறுபாணாற்றுப் படை கடந்து
பெரும்பாணாற்றுப் படை வென்று
முல்லைப் பாட்டு பாடி
மதுரைக் காஞ்சிக்கு வா..

நெடுநல் வாடையில் நெகிழ்ந்து
குறிஞ்சிப்பாட்டில் முகிழ்ந்து
பட்டினப்பாலையில் மகிழ்ந்து
மலைபடுகடாமில் மனமேந்தி.....

பத்துமாதம் சுமந்த உன் தாய்......
பத்துப் பாட்டோடு விழித்திருக்கிறேன்
விரைந்து வாடா... என் வீரத்திரு மகனே..!

தேன் சிட்டு..




அலகூட்டும் 
அழகுச்சிட்டு
அதரம் தொட்டு
அமுதூட்டும்
தேன் சிட்டு..

கூடு விட்டு
மரமமர்ந்து
கொஞ்சுகிற
பஞ்சு சிட்டு..

வெண்பட்டு
மேனிசிலிர்க்க
விழி காட்டும்
வழி சென்று
களிப்பூட்டும்
கவிச்சிட்டு..

செல்லமாய்
மெல்லமாய்
சிநேகிதமாய்
காதலின்
கரு சொல்லும்
சின்ன தேன் சிட்டுக்கள்...!

போர்க்களத்தில் பூவொன்று..!



இடைவிடாத 

குண்டு மழைகளுக்கிடையில் 
எனை அழைத்தாய்..

அச்சம் தவிர்த்து
ஆறுதல் தேடினாய்
நெஞ்சில் இடம் தந்து
நேச மழை பொழிந்தேன்..

என் ஆண்மை வாசத்தில்
அடைக்கலமானாய்...!

விழிநீரைத் துடைத்துவிட்டு
மொழியில்லா மெளனம் காத்தாய்..

தொட்டு தொட்டு உனை ரசித்து விட்டு
விட்டு விட்டுப் போக மனதில்லை..

எல்லை கடந்து போகிறேன்..
ஆதலின் உன்னிடம் எல்லை மீறாமல் போகிறேன்..

புரட்சி விடியலில்
பூபாளம் இசைக்க
நெடும்பயணம் செல்கின்றேன்..

காதல் அழைக்கிறது
கடமை தடுக்கிறது...
காத்திரு என்
பாசச் சுடர் மதியே...

துப்பாக்கி ஓசை அடங்கி
நமக்கென்றொரு
நாடு மலரும்
நாள் வரை காத்திரு
என் காந்த மலரழகே..!

ஞாயிறு, 6 ஜூலை, 2014

எட்டுத்தொகை இலக்கியம் வெல்வோம் வா..!


குறுந்தொகையாய் நீ வந்தாய்.. 
நற்றினையாய் நானானேன்...
பதிற்றுப்பத்தில் கரம் பிடித்தோம்..
ஐங்குறு நூறாய் 
பரிபாடல் பாடினாய்...
கலித்தொகையாய் 
வியந்து நின்றேன்..!
அக நானூறு படைத்த நாம்
புற நானூறும் படைத்து
எட்டுத்தொகை இலக்கியம் வெல்வோம் வா..!!

வியாழன், 15 மே, 2014

மதுஓவிய மாதுமலர்கள்


அழகின் தளும்பல்களில்
ஆசைச் சுனை அவள்

என்னைக் களவு கொள்ள
கனவு பூத்த பேரழகி

பார்க்கிறாள்..பரிதவித்து போகிறேன்
சிரிக்கிறாள்...சிதைந்து போகிறேன்

மகரந்தகுழல் நீட்டி
மணம் தொடுகிறாள்...கனிந்து போகிறேன்

அவளின் அடுக்கடுக்கான அழகில்
அங்கமெங்கும் தன்னியல்பு விட்டுக் குழைய

சிலம்புச் சலங்கைகட்டி ஆடுகிறாள்
சிந்தையெங்கும் சிதறுகிறது ..என் மன மாணிக்கப்பரல்கள்

அவள் வதன அழகு தேடி
என் முகம் நான் புதைக்க...இவள்
அதிமென்மையவளோ
அதிநுண்மையவளோ

வண்ணத்தாவணி முந்தானை விரித்து
என்வாசம் வசம் செய்யதவளோ

உல்லாச தென்றல் விரித்து
உயிராடும்பிரியம் கூட்டி
ஊண் அமுதம் உருகச் செய்து

நித்தில  ஒளிவீசி.....

நித்தம் என் கனவு ஆடும் பேரழகியலே

நீ என்ன
என்னில் துளி வாங்கி
தூளியாடி.....

என்னைகளவு கொண்டு
கட்டில் தொட்டிலாடும்...கார்முகில் தாய்மையோடி

என் நேசச் சூலழகி....!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

கவிதை - " சுந்தரி கதிர்."